
சென்னை,அரசு பள்ளி ஆசிரியர்களின், 'பயோ மெட்ரிக்' வருகை பதிவு தொழில்நுட்பத்தில், தமிழ் இல்லாமல், ஹிந்தி இடம் பெற்றுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளின் ஆசிரி யர்களில் பெரும்பாலானோர், மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், நியமிக்கப் படுகின்றனர். இவர்களுக்கான சம்பளத்தில், குறிப்பிட்ட தொகையை, மத்திய அரசு வழங்குகிறது.
இந்நிலையில், ஆசிரியர்களின் வருகை பதிவில் குளறுபடி ஏற்படுவதை தடுக்கவும், முறைகேடுகளை களையவும், பயோ மெட்ரிக் வருகை பதிவு தொழில்நுட்பத்தை, மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது.இந்த திட்டம், அனைத்து பள்ளிகளிலும் அமலுக்கு வந்துள்ளது. ஆசிரியர்களின் புகைப்படம், அவர்களின் பணி குறியீட்டு எண்ணுடன், விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஆன்லைன் பதிவு கருவியிலும், பள்ளியில் ஒருங்கிணைக்கப்பட்ட கணினியிலும், இதுவரை ஆங்கிலத்திலும், தமிழிலும் தகவல்கள் இடம் பெற்று இருந்தன.தற்போது, ஆங்கிலமும், ஹிந்தியுமாக மாற்றப்பட்டுள்ளது.
அதில், தமிழ் இல்லை என, ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, பள்ளி கல்வி இயக்குனர் மற்றும் செயலருக்கு, ஆசிரியர்கள் சங்கங்கள் சார்பில், மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்னையை அரசியல் கட்சிகளின் கவனத்துக்கும், சங்க நிர்வாகிகள் எடுத்து சென்றுள்ளனர்.
No comments:
Post a Comment