கோவை : பாரதியார் பல்கலையில் பணியிடங்களை நிரப்ப, துணைவேந்தர் கணபதிக்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட பேராசிரியர்களின் பட்டியலை, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆதாரங்களுடன் சேகரித்து வருகின்றனர்.
பல்கலை பணியிடங்களுக்கு பேரம் பேசிய பேராசிரியர்கள்! - இடைத்தரகர்களின் பட்டியல் சேகரிப்பு பணி தீவிரம்
கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி, உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும், களவுமாக சிக்கினார். இவருடன், பல்கலை வேதியியல் துறை தலைவர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார்.
துணைவேந்தருக்கு சகல வகையிலும், உறுதுணையாக இருந்த தொலைதுார கல்வி மைய இயக்குனர் மதிவாணன் மீதும், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதன்பின், மூன்று முறை பல்கலையில் சோதனையிட்டு, துணைவேந்தர் அலுவலகம், பதிவாளர் அலுவலகங்களில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
இதற்கிடையே, பல்கலையில் உதவி பேராசிரியர் உட்பட பல பணியிடங்களுக்கு விண்ணப்பித்திருந்தவர்கள், தங்களிடம் பணி நியமனத்துக்கு லட்சக் கணக்கில் பேரம் பேசியதாக புகார் அளித்திருந்தனர். இதில், சில துறைகளின் தலைவர், பேராசிரியர்கள், துணைவேந்தர் கணபதிக்கு இடைத்தரகர்களாக செயல்பட்டதாக கூறியிருந்தனர்.
இதன் அடிப்படையில் கிடைத்துள்ள ஆவணங்களை வைத்து, போலீசார் ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். நேர்முகத் தேர்வில் பங்கேற்று புகார் அளித்த நபர்களிடம், நேற்று முன்தினம் கவுண்டம்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில், மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
மாணவர்கள் இருவர் உட்பட ஆறு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பணி நியமனத்துக்கு பேரம் பேசிய நபர்கள் யார், நேர்முக தேர்வில் பங்கேற்று கேள்வி கேட்ட பேராசிரியர்கள் யார், தொலைபேசி உரையாடல்கள் உட்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
அப்போது, துணைவேந்தர் கணபதிக்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட பேராசிரியர்கள், அதிகாரிகள் உட்பட பல்வேறு தகவல்கள் கிடைத்தன. இடைத்தரகர்களாக செயல்பட்ட பேராசிரியர்களின் பட்டியலை போலீசார் சேகரித்துள்ளனர்.
இந்த நபர்களிடம் விரைவில் விசாரணை நடத்த, போலீசார் திட்டமிட்டுள்ளனர். முன்னாள் மாணவர்கள், நேர்முக தேர்வில் பங்கேற்றவர்கள் அளித்த பதில்கள் வழக்கில் சேர்க்கப்பட உள்ளன. இதனால், துணைவேந்தர் கணபதிக்கு, இடைத்தரகர் வேலை பார்த்த பேராசிரியர்கள் பீதியில் உள்ளனர்.
இன்று, 'கஸ்டடி?'
துணைவேந்தர் கணபதியை ஐந்து நாள், 'கஸ்டடி' எடுத்து விசாரிக்க, கோர்ட்டில் அனுமதி கேட்டு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடக்க உள்ளது. கோர்ட் அனுமதி கிடைத்து துணைவேந்தரை, 'கஸ்டடி' எடுத்து விசாரிக்கும்போது, பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பல்கலை வட்டாரங்களில் மட்டுமில்லாமல் அரசியல்வாதிகள் மத்தியிலும் அச்சம் நிலவுகிறது.
No comments:
Post a Comment