திருநெல்வேலி:நெல்லை அருகே, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி அடிப்படை வசதியின்றி, போதுமான வகுப்பறைகள் இன்றி செயல்பட்டு வருகிறது.
திருநெல்வேலியில் உள்ள அனைத்து கிராமங்களிலும், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள் உள்ளன. இருப்பினும், அரசு அவற்றிற்கு போதிய கவனம் செலுத்தாததால் மாணவ, மாணவியர் அவதியுறுகின்றனர். நெல்லை, தருவையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், கடந்த ஆண்டு, 250 மாணவ, மாணவியர் பயின்றனர். ஒவ்வொரு பிரிவிலும் இரு வகுப்புகளுடன், தமிழ் மற்றும் ஆங்கில வகுப்புகள் செயல்படுகின்றன.
இந்த ஆண்டில் கூடுதலாக, 66 மாணவர்கள் சேர்க்கைக்கு பின், மாணவர்களின் எண்ணிக்கை, 316 ஆக உயர்ந்துள்ளது. இரு வகுப்புகள் கட்டடம் இல்லாமல் மரத்தடியிலும், 1964ல், பள்ளி துவக்கப்பட்ட போது கட்டப்பட்ட உடைந்த ஓட்டுக் கட்டடத்திலும் செயல்படுகிறது. அதே வளாகத்தில் செயல்படும் உயர்நிலைப் பள்ளிக்கு சொந்தமான, இரு வகுப்பு அறைகள் தற்போது பயன்படாமல் உள்ளன.
அவற்றை உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தர மறுப்பதால், துவக்கப் பள்ளி மாணவ, மாணவியர் அவதியுறுகின்றனர். எனவே, கல்வித் துறை அதிகாரிகள், இது குறித்து நடவடிக்கை எடுக்க, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment