சென்னை: ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின், தனி அலுவலர் பதவிக் காலத்தை நீட்டிக்க, சட்டசபையில், நேற்று புதிய சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.மத்திய அரசு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், வேளாண் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு நிதி மூலம், தேசிய வேளாண் சந்தை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த, முடிவு செய்து உள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்த, ஒரு விற்பனைக் கூடத்திற்கு, 30 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இந்நிதியில், மின்னணு வர்த்தகம், சீரான ஒருமுனை உரிமம், ஒரு முறை விற்பனை கட்டணத் தீர்வை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.இதற்காக, வேளாண் விளைபொருள் விற்பனை சட்டத்தில், தேவையான விதிமுறைகளை கொண்டு வர, அரசு முடிவு செய்துள்ளது. மேலும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், தனி அலுவலர்களின் பதவிக் காலம், 2015 மே, 30ல் முடிவடைந்து விட்டது. தற்போது, விற்பனை குழுக்களுக்கு, புதிய உறுப்பினர்களை நியமிக்க, அதிக கால அவகாசம் ஏற்படும்.
எனவே, புதிய உறுப்பினர்களை நியமிக்கும் வரை, தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட முன்வடிவை, வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.
No comments:
Post a Comment