மதிப்பெண்களைவிட படைப்பாற்றலை மாணவர்களிடம் வளர்க்க வேண்டும் என விஞ்ஞானி அரவிந்த்குப்தா வலியுறுத்தினார்.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) சார்பில், கணித, அறிவியல் செய்முறை புத்தாக்கப் பயிற்சி முகாம், சென்னை சைதாப்பேட்டை, ஆல்பா மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்றது. எஸ்சிஇஆர்டி இயக்குநர் ராமேஸ்வர முருகன் முகாமைத் தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கழிவுப் பொருள்களில் இருந்து பொம்மை தயாரித்தல், எண் கணிதம், அறிவியல் செய்முறை விளக்கப் பயிற்சிகளை விஞ்ஞானி அரவிந்த்குப்தா வழங்கினார்.
அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் 100 சதவீத தேர்ச்சி, மதிப்பெண்களை நோக்கி மட்டுமே மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதைத் தாண்டி அவர்களிடம் இயல்பாக இருக்கும் படைப்பாற்றலை வளர்க்க வேண்டும்.
ஐஐடி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களிடம் இந்த படைப்பாற்றல் எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களில் பெண் குழந்தைகளுக்குத் தங்களின் திறனை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் பெரும்பாலான அறிவியல் கருத்துருக்களை பெண்கள் வழங்கியிருக்கின்றனர்.
எனவே கல்வியுடன், பார்க்கும் பொருள்களில் இருக்கும் அறிவியல் சித்தாந்தங்களை சிந்திக்கக் மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் எஸ்சிஇஆர்டி பேராசிரியர்கள் ஆசிர் ஜூலியஸ், இன்பராஜ், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment