இந்தியாவிலே கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் தமிழகம் மட்டுமே என விருதுநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.
விருதுநகரில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு 114-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எஸ்.பி. சண்முகநாதன், மக்களவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், கே.வி.எஸ். மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற கல்வி திருவிழாவில் செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது: இந்திய நாட்டை ஆளும் பிரதமரை உருவாக்கும் திறமை படைத்தவர் காமராஜர். கல்விக்கு கண் கொடுத்தவர் காமராஜர் என்றால், கல்விக்கு உயிர் கொடுத்தவர் தமிழக முதல்வர் என்றார் அவர். பால்வளத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பேசியதாவது: காமராஜர் தமிழகத்தில் 9 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். 9 ஆண்டுகள் சிறையிலும் இருந்தார். இவர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை தற்போது சிறப்பாக நடத்தி கொண்டிருப்பவர் முதல்வர் ஜெயலலிதா. இந்தியாவில் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் மாநிலம் தமிழகம் மட்டும் தான். மெர்க்கண்டைல் வங்கியை பிரதமர், மத்திய நிதி அமைச்சரிடம் பேசி மீட்டுத் தந்தவர் ஜெயலலிதா. சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர் ஜெயலலிதா மட்டுமே என்றார் அவர். இந்த நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாண்டியராஜன், செல்வ மோகன்தாஸ் பாண்டியன், சுப்பிரமணியன், சந்திரபிரபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment