மதுரையில் தென்மாவட்டங்களுக்கான பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுத் தாள்கள் திருத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் தேர்ச்சியைத் தவறவிட்டவர்களுக்கான சிறப்புத் துணைத் தேர்வுகள் அண்மையில் நடைபெற்றன. இத்தேர்வுத் தாள்கள் திருத்தும் பணி, மதுரை அனுப்பானடி பகுதியில் உள்ள செளராஷ்டிர பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.
மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுகளின் தாள்கள் அனைத்தும் அப்பள்ளியிலேயே திருத்தப்படவுள்ளன.
தேர்வுத் தாள்கள் திருத்தும் பணிக்கான ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் நெறிமுறைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி விளக்கியுள்ளார். தேர்வுத் தாள்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு திருத்தும் பணி இரு வாரங்களில் முடிக்கப்படவுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளஸ் 1 துணைத் தேர்வு முடிவு: மதுரை மாவட்டத்தில் 2015-16 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வில் ஓரிரு பாடங்களில் தேர்ச்சியை தவறவிட்டவர்களுக்கான சிறப்புத் தேர்வுகள் கடந்த வாரம் நடைபெற்றன. அத்தேர்வில் பங்கேற்ற 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரில் 55 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சியடைந்த மாணவர்கள் 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் அவர்கள் ஏற்கெனவே பயின்ற பள்ளிகளில் சேர்ந்து கல்வியைத் தொடர தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment