சென்னை: அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. போராட்டத்தின், மூன்றாவது நாளான நேற்று, தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட, 30 ஆயிரம் பேரை, போலீசார் கைது செய்து, சமாளிக்க முடியாமல் விடுதலை செய்தனர்.
'புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் உட்பட, தொகுதிப்பூதிய பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 68 சங்கங்களை உள்ளடக்கிய, அரசு ஊழியர் சங்கத்தினர், 10ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கினர். மூன்றாவது நாளாக நேற்றும், 'ஸ்டிரைக்' நீடித்தது.போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில், அரசு ஊழியர்கள், நேற்று, மாநிலம் முழுவதும் மறியலில் ஈடுபட்டனர். சென்னை, கிரீம்ஸ் சாலையில் மறியல் செய்த, அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தமிழ்செல்வி உட்பட, 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாவட்டங்கள் தோறும், அரசு ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில், 1,250 பேர்; துாத்துக்குடி, 850 பேர்; பெரம்பலுார், 750; அரியலுார், 350; மதுரை, 2,500 பேர் என, தமிழகம் முழுவதும், 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.இதில், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர் சங்கம், வருவாய்த் துறை, வணிக வரித் துறை உள்ளிட்ட, 68 சங்கத்தினர் பங்கேற்றனர். மாவட்டங்கள் தோறும், பல ஆயிரம் பேர் கைதானதால், போலீசாரால்சமாளிக்க முடியவில்லை. பெரும்பாலானஇடங்களில் தங்க வைக்க திருமண மண்டபங்கள் கிடைக்காததால், மரத்தடியிலும், திடல்களிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு, உணவு தர முடியாத நிலையில், பல மாவட்டங்களில், மதியமே விடுவித்தனர்; மற்ற பகுதிகளில், மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இது குறித்து, அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தமிழ்செல்வி கூறியதாவது: பிரச்னைகளுக்கு தீர்வு காண, அரசு ஆர்வம் காட்டவில்லை. எனவே, மறியலில் ஈடுபட்டுள்ளோம்; காலவரையற்ற ஸ்டிரைக் நீடிக்கும். பேச்சு நடத்தும், மூத்த அமைச்சர்கள் குழு, புதிதாக மனு வாங்குவது போன்று நேர்காணல் தான் நடத்துகிறது. முதல்வரிடம் கோரிக்கைகளை கொண்டு சென்றதாகவும் தெரியவில்லை. எனவே, போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில், 15ம் தேதி முதல், மாநிலம் முழுவதும், தினமும் மறியல் செய்வது என முடிவு செய்துள்ளோம். எங்கள் கோரிக்கைகளைஏற்கும் வரை, போராட்டம் ஓயாது. இவ்வாறு அவர் கூறினார்.
அரசு ஊழியர் சங்க போராட்டம் தீவிரமடையும் நிலையில், இதுவரை அமைதியாக இருந்த, தலைமைச் செயலக ஊழியர் சங்கமும், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியும், இதற்கு ஆதரவு அளித்துள்ளன.'
தேர்தலில் பாடம்!'
அரசு ஊழியர்கள், ஸ்டிரைக்கில் பங்கேற்றதால், 2003ல், 'எஸ்மா, டெஸ்மா' சட்டங்களின் கீழ், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அதன் விளைவு, 2004 லோக்சபா தேர்தல், 2006 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., எதிர்பார்த்த வெற்றி பெற முடியவில்லை.இந்த முறை, அது போன்ற செயலில் அரசு இறங்காது என நம்புகிறோம். அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மறுத்தால், சட்டசபை தேர்தலில், பாடம் கற்க வேண்டி வரும். - குமார், மாநிலச் செயலர், அரசு ஊழியர் சங்கம்
'வாதாடி பெறுவோம்!'
தமிழக அரசு பொறுப்பேற்ற, ஐந்து ஆண்டுகளில், அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் எதையும் நிறுத்தவில்லை; கேட்காமலேயே அரசு பல சலுகைகளை தந்துள்ளது. கோரிக்கைளை போராடி பெறுவதை விட, வாதாடி பெறுவது சிறந்தது. கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, ஸ்டிரைக்கை ஆதரிக்கவில்லை. - டி.வின்சென்ட், மாநிலத் தலைவர், தமிழ்நாடு அரசு அனைத்து பணியாளர் கழகம்
No comments:
Post a Comment