குமரிக் கடல், அதை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில், புதிதாக மேலடுக்குச் சுழற்சி உருவாகியுள்ளது.
இதன் காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்பட தென் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குமரிக் கடல், அதை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில், வெள்ளிக்கிழமை புதிதாக மேலடுக்குச் சுழற்சி உருவாகியுள்ளது.
இந்த நிகழ்வின் காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏற்கெனவே, குமரிக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, வியாழக்கிழமை வலுவிழந்து விட்டது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை உள்பட தமிழகத்தின் பிற பகுதிகளிலும், புதுச்சேரியிலும் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
சென்னை மாநகரைப் பொருத்தவரை, பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாநகரில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம்( மி.மீட்டரில்):
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் அதிகபட்சமாக 90 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
அதற்கு அடுத்து, திருச்செந்தூரில் 70 மி.மீ, நாகை, நாங்குநேரியில் தலா 50 மி.மீ, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் 40 மி.மீ, தூத்துக்குடி, தூத்துக்குடி துறைமுகம், தரங்கம்பாடி, கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி, லோயர் கோதையாறு, பாபநாசம், ராமேசுவரம் ஆகிய பகுதிகளில் தலா 30 மி.மீ மழை பதிவானது.
No comments:
Post a Comment