சிவகங்கை:தமிழகத்தில் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யக்கோரி, ஆசிரியர்கள் கலெக்டர்கள் மூலம் முதல்வருக்கு மனு அனுப்பினர்.
மாநிலஅளவில், அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப மாதம் ரூ.5,000 சம்பளத்தில் 16,549 பகுதி நேர ஆசிரியர்களை முதல்வர் ஜெ., கடந்த 2012ல் நியமித்தார். ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, 2014ல் ஏப்ரல் முதல் சம்பளத்தில் ரூ.2 ஆயிரம் அதிகரித்து வழங்கப்பட்டது.
மேலும், அதற்கான நிலுவை தொகையாக ஒவ்வொரு பகுதி நேர ஆசிரியருக்கும் ரூ.12 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது. இனசுழற்சி, நேர்முக தேர்வு மூலம் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சிவகங்கை கலெக்டர் மலர்விழியிடம் மனு அளித்தனர்.
கூட்டமைப்பு மாநில தலைவர் எம்.ராஜா, சிவகங்கை தலைவர் குமரேசன் கூறியதாவது: முதல்வர் ஜெ., எங்கள் கோரிக்கையை ஏற்று, சம்பள உயர்வு வழங்கினார். தற்போது கருணை கூர்ந்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டரிடம், பகுதி நேர ஆசிரியர்கள் மனு அளித்தனர், என்றனர்.
No comments:
Post a Comment