Pages

Tuesday, July 26, 2016

ஓய்வுபெற்ற ஊழியர் பணம் எங்கே? : போக்குவரத்து கழகத்தில் போராட்டம்

அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்றோர், இரண்டு, மூன்று ஆண்டுகளாக, ஓய்வுக்கான பணப்பயன் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். சிக்கலுக்கு தீர்வு கோரி, சென்னையில் உள்ள, அரசு போக்குவரத்து கழக அலுவலகமான பல்லவன் இல்லத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர். வழக்கமாக, ஓய்வு பெறுவோருக்கு, ஓய்வு நாளில்,
அவர்களுக்கான பணப் பயன்கள் வழங்கப்படும். ஆனால், அரசு போக்குவரத்து கழகங்களில், ஓய்வு பெறுவோருக்கு, பணப் பயன்கள் கிடைப்பதில்லை. இதற்காக, பின் தேதியிட்டு காசோலைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், அவற்றை வங்கியில் செலுத்தினால், பணம் கிடைப்பதில்லை. இப்படி, இரண்டு, மூன்று ஆண்டுகளாகியும், பணப்பயன் கிடைக்காததால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அலுவலகங்களுக்கு நடையாய் நடக்கின்றனர். அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், அதிருப்தி அடைந்த, அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர் நல சங்கத்தினர், நேற்று பல்லவன் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து, சங்க துணைத் தலைவர் சந்திரன் கூறியதாவது: ஊழியர்களின் பல ஆயிரம் கோடி ரூபாய் சேமிப்பு பணத்தை, போக்குவரத்து கழகங்கள் செலவு செய்து விட்டதே காரணம். அதிகாரிகளை சந்தித்தபோது, 'உங்கள் கோரிக்கை நியாயமானது; நிதிநிலை விபரங்கள் பற்றி தெரிந்து, தகவல் சொல்கிறோம்' என, அனுப்பி விட்டனர். இதற்கு, எப்போது விடிவு கிடைக்குமோ? இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment