அனைத்து கலை கல்லுாரிகளிலும் உளவியல் ஆலோசகர் நியமிக்க வேண்டும், என, முதல்வர்களுக்கு கல்லுாரி கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனால், பல தவறான முடிவுகளை எடுப்பதுடன், தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுகின்றனர். சமீப காலமாக கல்லுாரி மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு முடிவு செய்துள்ளது.தவறு செய்ததற்காக அளிக்கப்படும் சிறு தண்டனை கூட மோசமான முடிவுகளை எடுக்க துாண்டும். இதனால் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை தடுக்கவும், மன உளைச்சலை போக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு பாடப்பிரிவிலும் ஒரு பொறுப்பாசிரியரை நியமிப்பது. அதிக நாள் விடுப்பு எடுக்கும் மாணவ, மாணவிகளை கண்காணித்து விடுப்பு எடுக்காமல் இருக்க ஆலோசனை வழங்குவது. தேர்வு எழுத குறைந்தபட்ச வருகை நாள் குறித்து கல்வி ஆண்டு துவக்கத்திலேயே மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் மாணவ, மாணவிகளிடம் நெருக்கமாக பழகி ஆற்றுப் படுத்தும் திறன் கொண்ட ஆசிரியர் ஒருவரை அனைத்து அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரிகள் மற்றும் சுய நிதி கல்லுாரிகளிலும் உளவியல் ஆலோசகராக நியமிக்க வேண்டும். அவர்களை மாணவர்கள் அலைபேசியில் தொடர்பு கொள்ள அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment